Asianet News TamilAsianet News Tamil

ஜெ. இல்லம் குறித்தான அதிரடி தீர்ப்பு – மேல்முறையீடு செய்யபோகிறதா அதிமுக …?

வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும் அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் மூன்று வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா எனும் கேள்வி எழும்பியுள்ளது.

Chennai high court judgement
Author
Chennai, First Published Nov 24, 2021, 6:06 PM IST

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நிலத்தை கையகப்படுத்துவதற்கான தொகையையும் உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. ஜெயலலிதா இல்லம் அரசின் சொத்தாக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடி வாரிசுதாரர்கள் தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ளாலம் என்றும் தமிழ் நாடு அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசு தீபா, தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், " ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்ந்த குடியிருப்பை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். குடியிருப்பை, நினைவில்லமாக மாற்றவும் தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில், தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆனால், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர நீதிமன்றத்தில் வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலைப்பாடு சட்டத்திற்கு எதிரானது” என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த வந்த நீதிபதி சேஷாயி இன்று வழங்கிய தீர்ப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று கூறியதுடன், ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என ஒரே நபருக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்குவதற்கு அரசு சார்பில் இழப்பீடாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட ரூ.67.9 கோடி அரசுக்கு திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒவ்வொரு தொண்டரின் எண்ணத்திலும் வேதா இல்லம் கோயிலாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் எடுக்கப்படும் மேல் நடவடிக்கை குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும்” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios