Cheetah for Seetha? The mess in the Neet question paper
பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நீட் தேர்வில், தமிழில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகள் முற்றிலும் தவறாக உள்ளது என்று டெக் ஃபார் ஆல என்ற தனியார் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ராம்பிரகாஷ், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக உள்ளதால், 194 சலுகை மதிப்பெண் தர வேண்டும் எனவும் டெக் ஃபார் ஆல் அமைப்பின் நிறுவனர் ராம்பிரகாஷ் கூறியுள்ளார்.
நீட் தேர்வு உலகளவிலான இந்த தேர்வில், தமிழில் தவறாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்றார். அதாவது ஆங்கிலத்தில் சீட்டா (சிறுத்தை) என்பது தமிழில் சீத்தா என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக மாணவர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு தேர்வு அறைக்குள் நுழைந்தால், தவறான மொழிபெயர்ப்பால் ஏற்பட்ட குழப்பத்தால் மாணவர்கள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக தமிழக மாணவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும், நீதிமன்றத்தை நாடும்பட்சத்தில் நிச்சயமாக கருணை மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஒரு தவறான கேள்விக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 49 கேள்விகளுக்கு மொத்தம் 196 கருணை மதிப்பெண் கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த நிலை நீடிக்காமல் இருக்க தமிழகத்தில் தரமான தமிழ் நீட் வினா புத்தகத்தை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராம் பிரகாஷ் கூறினார்.
