central govt to go supreme court the issue of cauvery board

காவிரி விவகாரத்தில் உச்சநிதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன என்பதற்கு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.

நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. எனவே உச்சநீதிமன்றம் , இந்த இரண்டு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று கூறியது என்பது சாதாரண மக்களால்கூட புரிச்து கொள்ள முடியும்.

இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் கூறியதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கூறவில்லை என வாதிட்டு வருகிறது.

மத்திய அரசும் இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் மத்திய அரசு அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள 6 வார ‘கெடு’ இன்றுடன் முடிகிறது. ‘கெடு’ முடியும் நாள் வரை காத்திருக்கப்போவதாக தமிழக அரசு கூறி உள்ளது.

இந்நிலையில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன? என்பது பற்றி மாறுபட்ட கருத்துகள் ஏற்பட்டு இருப்பதால், அது குறித்து விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் அனுமதி அளித்து உள்ளார். திரும்பவும் முதல் இருந்தா ? என பொதுமக்களும், விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.