நிர்மலா தேவி விவகாரம் ….. தலைமறைவான பேராசிரியர் வீட்டில் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை
கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைக்க விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் திருச்சுழி வீட்டில் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி அக்கல்லூரியில் பயிலும் சில மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம்சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தினர்.சனிக்கிழமை நிர்மலாதேவியின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர் அங்கு சில முக்கிய கணினி உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர்.
பின்பு,அவரது வீட்டைப் பூட்டி சீல் வைத்தனர். இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வரும் கலைச்செல்வன் என்ற பேராசிரியரிடம் நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் 14 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதில் கருப்பசாமி என்பவரது வீடு, விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியை அடுத்த நாடாகுளத்தில் உள்ளது. நேற்று அவரது வீட்டிற்கு சென்ற சிபிசிஐடிகாவல்துறையினர் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.