பாபாவிடம் இருந்து உண்மையை கக்க வைக்க சிபிசிஐடி திட்டம்.. மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை.
பாலியல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் 3 வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த 3 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து கடந்த 16 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சுஷ்மிதா என்ற நடன ஆசிரியையும் கடந்த 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 19 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை சீரானதால் நேற்று முன்தினம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட இவரை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபா போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாள் காவலில் பெறப்பட்ட 3 புகார்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி, வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.