Cauvery Management Board will be set up in 2 weeks - Nasser interviewed after Governor meeting

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மாணவர்கள் அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் சார்பாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமா துறையினர் சார்பில், சென்ற மாதம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், விஷால், நாகர், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள்
சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டின் உரிமையை மீட்க வேண்டும், இதற்கு மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் அப்போது நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் நடிகர்கள் விஷால், நாசர், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பொன்வண்ணன், விக்ரமன் உள்ளிட்டோர் இன்று ஆளுநர் மாளிகை சென்று ஆளுனர் பன்வாரிலால் புரோகத்தை சந்தித்தனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அவரிடம் கொடுத்தனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் பிறகு, நாசர், பொன்வண்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் மனுவில் ரஜினி, கமல், விஜய் உள்பட திரை உலகைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டிருந்தனர். ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அதனை ஆளுநரிடம் கொடுத்தோம். 

மனுவை பெற்றுக் கொண்ட அவர், இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று நம்பிக்கை கூறினார். என்றனர். மேலும் மனுவின் நகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும்
வலியுறுத்தினோம். அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.