ஓ.பன்னீர்செல்வத்திற்கு புதிய தலைவலி.. சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு..!
போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் களமிறக்கப்பட்டார்.
அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்த தங்கத் தமிழ்ச்செல்வன் ஓபிஎஸ் வாக்கு வங்கியை சிதறடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஓபிஎஸ் 11,055 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்;- அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஓபிஎஸ் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.