இனி ஓடவும் முடியாது... ஒழியவும் முடியாது..! சென்னை மாநகராட்சி போட்ட கடும் உத்தரவு..!
வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சென்னை மாநகராட்சி தீவிரமாக கண்காணித்து வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சென்னை மாநகராட்சி தீவிரமாக கண்காணித்து வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சென்னை மாநகராட்சி தீவிரமாக கண்காணித்து வருகிறது.
வார விடுமுறை நாட்களில் தியாகராயநகர், புரசைவாக்கம், பாடி போன்ற பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடுவது கவனத்திற்கு வந்துள்ளது. கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரூ. 5.43 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதைத் தவிர வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், மண்டபங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றிடம் இருந்து மொத்தம் ரூ.5.35 லட்சம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தற்போது வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் தியாகராயர் நகர், புரசைவாக்கம், பாடி போன்ற பகுதிகளில் 5 மண்டல அமலாக்கக் குழுவினர் கூடுதலாக பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’என எச்சரிக்கை விடுத்துள்ளது.