ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் அரசியலமைப்பை காப்பாற்ற முயற்சிக்க மாட்டார் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியோடி முடிகிறது. இதனையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் தங்களுடைய பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை அறிவித்துள்ளன. இதனையடுத்து தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி திரெளபதி முர்முவும் யஷ்வந்த் சின்ஹாவும் ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் யஷ்வந்த சின்ஹா குஜராத் மாநிலம் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு கடன் கொடுக்காதீங்க.. சர்ச்சையை கிளப்பிய மம்தா

அப்போது எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், “குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது மிகப்பெரிய போராக மாறியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஒரு நபர் குடியரசு தலைவரான பிறகு அரசியலமைப்பை காப்பாற்ற தன்னுடைய உரிமைகளைப் பயன்படுத்துவாரா என்பதுதான் கேள்வி. ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவரால் அதை ஒருபோதும் செய்ய முயற்சி செய்ய மாட்டார் என்பது வெளிப்படை ஆனது. இன்று அரசியலமைப்பு விழுமியங்கள், பத்திரிகைகள் உள்பட ஜனநாயக அமைப்புகள் எல்லாம் ஆபத்தில் உள்ளன. நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவி வருகிறது. இந்தியாவில் எமர்ஜென்சி இருந்தபோது எல்.கே. அத்வானியும், அடல் பிஹாரி வாஜ்பாயும் அதற்கு எதிராகப் போராடி சிறைக்கு சென்றார்கள்.

இதையும் படிங்க: தண்டி யாத்திரையில் மகாத்மா உடன் இருந்த கிறிஸ்துவர்.. யார் இந்த டைட்டஸ்?

இன்று அந்தக் கட்சியே (பா.ஜ.க.) நாட்டில் நெருக்கடி நிலையை விதிக்கிறது. இதெல்லாம் கேலிக்கூத்தானது. இரண்டு கொலைகள் (நுபுர் சர்மா விவகாரத்தைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள்) நடந்துள்ளன. இதை நான் உள்பட எல்லோரும் கண்டித்தார்கள். ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஒரு வார்த்தைகூட இதுபற்றி பேசவில்லை. வாக்குகளைப் பெறுவதற்காக இது போன்ற பிரச்சினைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் நாட்டின் உயர் பதவியைப் பெறுவதால் இந்தியாவில் உள்ள பழங்குடி சமூகங்கள் வாழ்க்கை மாறி விடாது.

ஒருவர் எந்த சாதி, மதத்தில் இருந்து வருகிறார் என்பதெல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் எந்தச் சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இப்போது நடப்பது இரு வேறு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் சண்டை. அவர் (திரெளபதி முர்மு) ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக 6 ஆண்டுகள் இருந்திருக்கிறார். அங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை மாறவில்லை.” என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு தேவையே இல்லை.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்