அதிமுகவுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்குன்னு இடைத் தேர்தலுக்கு அப்புறம் தெரியும் ! சவால் விட்ட எடப்பாடி !!
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுகவுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்விடுத்துள்ளார்.
நதிநீர் பிரச்சனை குறித்து கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்..
கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தோடு நல்லுறவு இருக்கின்ற காரணத்தினால்தான், கிருஷ்ணா நீர் இன்றைக்கு திறக்கப்படவிருக்கின்றது. ஆந்திர முதலமைச்சர் தமிழக அரசினுடைய கோரிக்கையை ஏற்று, சென்னை மாநகர மக்களுடைய குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரை திறந்திருக்கிறார்கள். அதேபோல கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் உள்ள நீர் குறித்து நேரடியாக பேசி ஒரு நல்ல தீர்வு காணப்படும் என தெரிவித்தார்..
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு தமிழகத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது திமுகவினருக்கு புரியும் என தெரிவித்தார்.
மேலும் திமுகவுக்கு இந்த தேர்தலில் பின்னடைவு இருக்கிறதோ, இல்லையோ, அ.தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை இந்த தேர்தலின் மூலமாக நிரூபித்துக்காட்டுவோம் என அதிரடியாக தெரிவித்தார்..