தனியாரால முடியுதாம்...! அரசால முடியலையாம்...! இது என்ன ஏமாத்து வேலையா இருக்கு...!
நான்கு பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் லாபம் காணும்போது தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கும் அரசு நஷ்டத்தில் இயங்குவது ஏன் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊதிய உயர்வு கோரி பஸ் டிரைவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
மக்களின் அசாதாரண நிலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருகின்றது.
மேலும் போக்குவரத்து ஊழியர்கள் கேட்ட ஊதிய உயர்வை அளிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
ஆனால் கேட்டதை தராமல் வண்டியை எடுக்க நாங்களும் முன்வர மாட்டோம் என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்து வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமுமின்றி இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இவ்விவகாரத்தில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நான்கு பேருந்துகளை மட்டுமே இயக்கும் தனியார் நிறுவன முதலாளிகள் லாபம் பார்க்கும்போது தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கும் அரசு நஷ்டத்தில் இயங்குவது ஏனோ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் எனவும் பேருந்துகளை அரசுடைமை ஆக்கி நஷ்டத்தில் தள்ளிவிட்டதே திராவிட கட்சி ஆட்சியாளர்களின் சாதனையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.