தமிழகத்தில் லஞ்சம், ஊழல் கரை புரள்கிறது... யாரை சீண்டுகிறார் அண்ணாமலை..?
ஒப்பந்தம் வாங்குவது முதல் பிறப்பு சான்றிதழ் வாங்குவது வரை எல்லாத் துறைகளிலும் ஊழல் கரைபுரள்கிறது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ எனும் நிகழ்ச்சிக்காக திண்டுக்கல்லுக்கு சென்றிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் தாசில்தார் தொடங்கி மேலே உள்ள அனைத்து துறைகளிலும் லஞ்சம் அதிகம் உள்ளது. அரசியல் முதல் அரசு அலுவலகங்கள் வரை ஊழல் புரையோடி உள்ளது. ஒப்பந்தம் வாங்குவது முதல் பிறப்பு சான்றிதழ் வாங்குவது வரை எல்லாத் துறைகளிலும் ஊழல் கரைபுரள்கிறது. மக்களிடம் இப்படி கொள்ளையடித்த பணத்தைதான் 2,000, 2,500 ஆக தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொடுப்பது தமிழக அரசியலில் வாடிக்கையாக உள்ளது. எங்களுக்கும் அதிமுகவுக்கும் இடையே கொள்கை ரீதியாக வேறுபாடு உள்ளது.
பாஜகவுக்கு 2021 தேர்தலில் மக்கள் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மத்திய அரசுக்கு வருமானம் தேவை என்கிற காரணத்தால்தான் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்துகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படவில்லை” என்று அண்ணாமலை தெரிவித்தார்.