தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டு வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகத்தில் நியமிக்கப்பட்ட பன்வாரிலாலுக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு கூடுதலாக அண்மையில் வழங்கப்பட்டது. மேலும் சண்டிகர் ஒன்றிய பகுதியின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து பன்வாரிலால் புரோஹித்தை விடுவித்து, புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நாகலாந்து ஆளுநராக இருந்து வருகிறார். அவரை அங்கிருந்து தமிழக ஆளுநராக மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி உளவுப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இவர் 1976-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்சைச் சேர்ந்தவர். உளவு துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் எனப் பல பதவிகளை ஆர்.என். ரவி வகித்து வந்துள்ளார். தமிழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக தொடருவார் என்றும் குடியரசுத் தலைவர் உத்தரவில் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred