இரு அணிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை - அதிமுக அம்மா அணி எம்பிக்கள் குற்றசாட்டு
அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என அதிமுக அம்மா அணியை சேர்ந்த எம்.பி.க்கள் நாகராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுவில் பல உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வந்ததால் அக்கட்சியின் பிரதான சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதைதொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க ஒ.பி.எஸ் அணியும் எடப்பாடி அணியும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதில் ஏதும் பிடிபடவில்லை. எனவே அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே இரட்டை இலைகளை மீட்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியது.
இதனால் இரு அணிகளும் சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கு ஒ.பி.எஸ் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அதில் சசிகலா தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக வைக்கப்பட்டது.
ஒ.பி.எஸ் தரப்பின் இந்த நிபந்தனைக்கு இ.பி.எஸ் தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே நாளை பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியை சேர்ந்த எம்.பி.க்கள் நாகராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை எனவும் அதிமுக சட்ட விதிகளுக்கு உட்பட்டு அழைப்பு விடுத்திருக்க வேண்டும் ஆனால் அதை அரசு செய்ய தவறி விட்டது எனவும் குற்றம் சாட்டினர்.