தேர்தலில் 20 தொகுதிகளிலும் பாஜக ஜெயிக்கும்... அதீத நம்பிக்கையில் பாஜக தலைவர் எல். முருகன்..!
தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் பிரமுகர்கள் பலர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் நேற்றோடு முடிந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பழநி முருகன் கோயிலுக்கு இன்று மாலை வந்தார். மலைக்கோயிலில் தங்க ரதம் இழுத்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. பணநாயகத்தின் மீதுதான் அக்கட்சி நம்பிக்கை வைத்துள்ளது. இதற்கான விடை மே 2-இல் தெரிய வரும். அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். ஆட்சியில் பங்கேற்பது பற்றி எங்களுடைய கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.