அதிமுகவின் பிளவால் வலிமையான திமுக... குடியரசு தலைவர் தேர்தலுக்குப்பின் ஆட்டத்தை தொடங்கும் பாஜக!
தமிழகத்தில் கழகங்களை சிதைத்து விட்டு காவி கொடியை பறக்கவிட வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். இரு கழகங்களும் வலுவாக இருந்ததால், அது பாஜகவுக்கு எளிதாக இல்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவை இரு அணிகளாக உடைத்து அதில் ஒரு அணியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது டெல்லி.
சசிகலாவை சிறைக்கு அனுப்பிதான் மூலம் முதல்வர் எடப்பாடியையும் தமது பிடிக்குள் கொண்டு வந்தது பாஜக.
அதே சமயம், யாரும் எதிர்பாராத வகையில், தினகரன் தனக்கென ஒரு அணியை உருவாக்கியதால், தற்போது அதிமுக மூன்று அணிகளாக சிதறி கிடக்கிறது.
இரு கழகங்களில் ஒன்றான அதிமுகவை தமது விருப்பம் போல இரண்டுக்கு மூன்றாக உடைத்தாலும், அதனால், பாஜகவுக்கு தமிழ் நாட்டில் எந்த பயனும் விளைய போவதில்லை.
மாறாக, வலுவான அதிமுக சிதைந்ததால், அது திமுகவிற்கு சாதகமாக மாறிவிட்டது. தற்போதுள்ள சூழலில் எப்போது தேர்தல் வந்தாலும், திமுகவே ஆட்சியை பிடிக்கும் நிலையில் வலுவாக உள்ளது.
இதனால், அதிர்ந்து போன பாஜக, அதிமுகவை மீண்டும் வலுவாக்கும் வகையில், பிரிந்த அணிகளை மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதற்கு, இடையூறு ஏற்ப்படாத வண்ணம், தினகரனும் சிலநாட்கள் சிறையில் இருந்தார்.
ஆனாலும், அணிகள் இணைப்பு முயற்சியில் தோல்வியே மிஞ்சியது. அதையும் மீறி அணிகள் இணைந்தால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை போல மீண்டும் மக்கள் செல்வாக்கு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
அதன் காரணமாக, திமுகவின் செல்வாக்கு கூடி இருப்பதுடன், அதன் செயல் தலைவர் ஸ்டாலினின் தலைமையும் வலுவாகி வருகிறது.
மேலும் எப்போது தேர்தல் வந்தாலும், பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் திமுக கூட்டணிக்கே செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து, அதிமுகவை சிதைப்பதாக நினைத்து, திமுகவை வலிமையாக்கி விட்டீர்களே என்று டெல்லி மேலிடத்தில், தமிழக பாஜக தலைவர்கள் முறையிட்டுள்ளனர்.
அதன் காரணமாகவே, டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடியையும், பன்னீரையும் சந்திக்க வைக்கவும், அணிகள் இணைப்பு குறித்து பேச வைக்கவும் பாஜக முக்கிய தலைவர்கள் முயன்றுள்ளனர்.
ஆனால், இருவருமே, பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவினரை கலந்து ஆலோசிக்காமல், சந்தித்து பேசுவது தவறு என்று, சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.
எனவே, இனி என்ன செய்வது என்று யோசித்த டெல்லி மேலிடம், திமுகவின் செல்வாக்கை சிதைப்பது என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
குடியரசு தலைவர் தேர்தலுக்கு பின்னர், திமுக எதிர்ப்பு ஆபரேஷன் தொடங்கும் என்று டெல்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.