தமிழகத்தில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுவதால் தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுவதால் தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்றல்ல. அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும் என்றும் கூறி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் திருவாடானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவ்ஃபீக் என்பவர், ஹிஜாப் குறித்த தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளை இழுத்து போட்டு வெட்ட வேண்டும். அந்த நீதிபதிகளை கண்ட துண்டமாக வெட்ட வேண்டும் என்று என் கனவில் வந்தது. அந்த நீதிபதிகளை விளக்கமாறால் அடிக்க வேண்டும். நாங்கள் இந்த நாட்டை நேசிக்க கூடியவர்கள் அல்லா. சாவதற்கு துணிந்தவர்கள் நாங்கள். எங்கள் மனது சொல்வதை செயல்படுத்தினால் நாடு தாங்குமா? என்று தெரிவித்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

இதுக்குறித்து பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்துள்ள நிலையில், இராமநாதபுரம் திருவாடானையில் 18/03/2022 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவ்ஃபீக் என்பவர் ஹிஜாப் குறித்த தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளை இழுத்து போட்டு வெட்ட வேண்டும் என்றும் அந்த நீதிபதிகளை கண்ட துண்டமாக வெட்ட வேண்டும் என்று என் கனவில் வந்தது என்றும் அந்த நீதிபதிகளை விளக்கமாறால் அடிக்க வேண்டும். நாங்கள் இந்த நாட்டை நேசிக்க கூடியவர்கள் அல்லர். சாவதற்கு துணிந்தவர்கள் நாங்கள். எங்கள் மனது சொல்வதை செயல்படுத்தினால் நாடு தாங்குமா? என்றும் பேசியுள்ளதையும் அந்த கூட்டத்தில் உள்ளவர்கள் அதை ஆமோதிப்பதையும் பார்க்க, கேட்க முடிகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் கூடியிருந்த பொதுமக்களை கொலை செய்ய தூண்டும் விதத்தில் பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது அந்த இயக்கம்.

திட்டமிட்ட ரீதியில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க, மதநல்லிணக்கத்தை குலைக்க, மதக்கலவரங்களை உருவாக்க, நீதிமன்றங்களின், நீதிபதிகளின் மாண்பை குறைத்து, அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று பொது வெளியில் பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டத்தை நடத்த விட்டு வேடிக்கை பார்ப்பதும், பேசிய பின் கைது செய்வது போன்ற நாடகங்களை நடத்துவது மிக ஆபத்தானது. இது தொடர்ந்தால், தமிழகத்தில் விபரீத விளைவுகள் ஏற்படும், மதநல்லிணக்கம் பாதிக்கப்பட்டு மத கலவரங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வருமுன் காப்போம் என்று முழங்கும் திமுக அரசு, வந்த பிறகு பார்ப்போம் என்று அமைதி காப்பது கண்டிக்கத்தக்கது. இனியும், தமிழக தவ்ஹீத் ஜமாஅத் இயக்க கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல், நீதிபதிகளை கொலை செய்வோம் என்று மிரட்டியவர்களை கைது செய்து சிறையிலடைப்பதோடு, தமிழகத்தில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுவதால் தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும். தவறினால், அந்த இயக்கத்தினால் ஏற்படும் கொடூர விளைவுகளுக்கு தமிழக அரசும், தமிழக காவல்துறையுமே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.