bjp trying to stop rk nagar election

எண்ணையை எந்த அளவு உடம்பில் தடவிக் கொண்டு புரண்டாலும், ஓட்டும் அளவுக்குதான் எதுவும் ஒட்டும் என்பது பாரதிய ஜனதாவுக்கு நன்றாகவே தெரியும்.

ஆர்.கே.நகர் பாரதிய ஜனதா வேட்பாளர் கங்கை அமரன், நிச்சயம் ஜெயிக்க மாட்டார் என்பது தெரியும். ஆனால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மை.

ஆனாலும் தற்போதுள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும், நான்கைந்து அணியாக பிரிந்து நின்றாலும், அதைவிட குறைவான வாக்குகளையே பாரதிய ஜனதா பெற முடியும்.

ஆகவே, பா.ஜ.க தழைப்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம், அதற்கு முன் அதிமுகவை உடைக்கலாம் என்பதே, அக்கட்சியின் தற்போதய செயல் திட்டம்.

இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டாலும், பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்து தினகரன் வெற்றிபெற்று விடுவார் என்ற அச்சமும் பாரதிய ஜனதாவுக்கு உள்ளது.

அதைப்போலவே, தினகரன் தரப்பில் முதல் கட்ட பணப்பட்டுவாடாவும் முடிந்து விட்டது. இரண்டாவது கட்ட பட்டுவாடா தொடங்க உள்ளது.

தேர்தல் நெருங்க, நெருங்க பணப்புழக்கம் இன்னும் பெரிய அளவில் இருக்கும். அப்போது அதை சில இடங்களில் கையும் களவுமாகப் பிடித்து, அதை காரணம் காட்டி தேர்தலை நிறுத்துவதே பா.ஜ.க திட்டம்.

அதற்காக தொகுதி முழுவதும் ரகசிய உளவாளிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். அவர்களும் கண்கொத்தி பாம்பாக பண பட்டுவாடா விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

எனவே, பிரச்சாரம் தொடங்கி வாக்குப்பதிவு நாள் நெருங்கும் வேளையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி போல தேர்தல் ரத்து அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

அவ்வாறு தேர்தலை நிறுத்தி, கொஞ்சம், கொஞ்சமாக அதிமுகவை கரைப்பதே பாரதிய ஜனதாவின் முதல் திட்டமாக உள்ளது.