அபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்ஷன் எடுத்த பாஜக!!
அபின் கடத்தலில் தொடர்புடைய பாஜக நிர்வாகி அடைக்கலாஜ் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் ஒரு காரில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலையடுத்து போலீஸார் சோதனையில் ஈடுபடுத்தினர். அப்போது நடந்த வாகன சோதனையில் ஒரு காரில் அபின் கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக பாஜக பெரம்பலூர் மாவட்ட துணை தலைவரும், ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினரான அடைக்கலராஜ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அடைக்கலராஜிடமிருந்து 2 கிலோ அபின் கைப்பற்றப்பட்டது கூறப்படுகிறது. இதன் மதிப்பு சர்வதேச அளவில் 10 லட்சம் ரூபாய். அபின் கடத்தலில் பாஜக நிர்வாகி சம்பந்தப்பட்டது தெரிய வந்ததையடுத்து ‘அபினுக்கு அரோகரா’ என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இந்நிலையில் அடைக்கலராஜை பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான அடைக்கலராஜ் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என அதில் தெரிவித்துள்ளார்.