காங்கிரசுக்கு தகுதி இருக்கா முதல்ல.. அந்தக்காலம் இது இல்ல.. கே.எஸ் அழகிரியை டார் டாராக கிழித்த அண்ணாமலை !!
தகுதியும் அருகதையும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. தங்களுக்கு கொஞ்சமேனும் துணிவிருந்தால் எங்களைப்போல தனியாக களம் காண முடியுமா? உங்களுக்கு வாக்காளர்கள் கிடைப்பார்களா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இன்னொரு புறம் அதிமுகவும் அதன். கூட்டணி கட்சிகளும் குழுவாகப் போட்டியிட்டனர். இவ்விரு கட்சிகளையும் கூட்டணி, பலத்தை நம்பாமல் தன்னந்தனியாக களம் கண்டு தமிழகம் முழுவதும் பரவலான வெற்றிகளையும், கணிசமான வாக்குப் பதிவுகளையும், பெற்ற பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக முன்னேறி இருக்கிறது.
இதைத் தமிழக ஊடகங்களும் சமூக வலைதளங்களும் தமிழக மக்களும் பாஜகவின் வெற்றியை பல கோணங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். எம் ஆதரவாளர்களுடனும், தொண்டர்களுடனும், பகிர்ந்து கொண்டபோது தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி பேசினேன். இதைக் கேட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் அவர்கள், மூன்றாவது கட்சி தாங்கள்தான் என்று வெகுண்டெழுந்து இருக்கிறார்.
காங்கிரசோடு ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முதலில் தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள், பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளட்டும். அதிலும் அவர் இன்னும் அந்தக்கால காங்கிரஸ் பற்றிய, பழைய நாட்களின் ஞாபகத்தில் இருந்து கொண்டிருக்கிறார். பெருமைக்குரிய பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் எந்த நிலையிலும், நான் காங்கிரஸோடு . ஒப்புநோக்கியது இல்லை.
அதற்கான அருகதையும், தகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை.தியாகத்தால் உருவான பாஜக, உயர்ந்த எண்ணம், சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான அமைப்பு. இதை பரம்பரை முதலாளிகளால் நடத்தப்படும், வணிக நிறுவனமான காங்கிரஸுடன் நான் எப்படி ஒப்பீடு செய்ய முடியும்.
இரண்டாவதாக, பாரதிய ஜனதா கட்சி பெற்ற ஓட்டு சதவீதத்தை, ஒரு சதவீதத்திற்கும் குறைவாக குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். உங்கள் கட்சியில் கணிதம் தெரிந்த யாராவது இருந்தால் அவரைவிட்டு நீங்கள் பாரதிய ஜனதா கட்சி பெற்ற உண்மையான வாக்கு சதவீதத்தை கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இல்லையேல், எதிரியின் பலம் என்னவென்று தெரியாமல் தோற்கும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிடும். அடுத்ததாக, திமுக தலைமையில் ஏற்பட்டுள்ள ஒரு மெகா கூட்டணியில் 13. கட்சிகளில் ஒரு கட்சியாக இருக்கும் அனுமதியை, தங்களுக்கு திமுக வழங்கியிருக்கிறது. 13 கூட்டணிக் கட்சிகளின் பலத்திலே. தாங்கள் பெற்ற இந்த வெற்றியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வெற்றி என்றா? தங்களுக்கு கொஞ்சமேனும் துணிவிருந்தால் எங்களைப்போல தனியாக களம் காண முடியுமா?
உங்களுக்கு வாக்காளர்கள் கிடைப்பார்களா? என்பதைவிட வேட்பாளர்கள் கிடைப்பார்களா? என்பதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். உங்கள் கட்சியின் நாடாளுமன்ற, உறுப்பினர் கழுத்தைப் பிடித்து தெருவில் தள்ளிய திமுகவின் காலடிச் சுவட்டில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு விட்டோம் என்ற துணிவில் பேசி இருக்கிறீர்கள். தங்கள் பெற்றிருப்பது, மக்களிடம் வெற்றியல்ல. திமுகவிடம் இருந்து இரந்து பெற்ற உங்கள் வெற்றிக்கு, உங்களுக்கு இறுமாப்பு எப்படி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் பதவி சுகத்துக்காக கட்சி மாறி, கட்சி மாறி கூட்டணி வைத்து, தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் இடம் இல்லாமல் செய்த சாதனைக்கு மட்டும்தான் நீங்கள் சொந்தக்காரர்கள். மானமுள்ள எந்த உண்மையான காங்கிரஸ் தொண்டனும். கட்சியை வளர்க்க. தனியாக போட்டியிடுவதை மட்டும்தான் விரும்புவான். ஆக, ஒட்டுண்ணியாக, சாறுண்ணியாக தாங்கள் ௭து என இரந்து பெற்ற உங்கள் வெற்றியை, எங்கள் உண்மைத் தொண்டர்களின் மானத்தை மதித்து, உழைப்பை மதித்து, பணபலம் இல்லாமல், நேர்மையாக மக்களை சந்தித்த எங்கள் வெற்றியுடன். நான் ஒருபோதும் ஒப்பிட மாட்டேன்.
தாங்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், தமிழகத்தின் இப்போதைக்கு மூன்றாவது மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சியாகிய நாங்களே இதை முதல் இடத்திற்கு முன்னேற்றுவதற்கான வேலைகளை முனைப்புடன் நாங்கள் செய்து கொண்டிருப்போம். அதுவரை, தாங்கள் திமுகவிற்கு சாமரம் வீரிக் கொண்டு இருங்கள்’ என்று கூறியிருக்கிறார்.