தமிழகத்தை சீரழித்தது தான் முதல்வர் ஸ்டாலினின் சாதனை என்று கூறி உள்ளார் பாஜக மூத்த தலைவர்  பொன்.ராதாகிருஷ்ணன். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாநில தேர்தல் குழு தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர் பேசிய அவர், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தராமல் தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்தி வருகிறது. வள்ளுவர் பிறந்தநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? 

பாரம்பரியம் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் நடைமுறையை மாற்றுவதற்காக மக்கள் யாரும் தி. மு. க. வுக்கு ஓட்டு போடவில்லை. கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரம் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் இளைஞர்கள் தடம்மாறி போவதற்கு தமிழகம் போதை மாநிலமாக மாறி வருவதே காரணம். மாநிலத்தின் தலைநகரான சென்னையில் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆட்சி பொறுப்பேற்ற சில மாதத்திற்குள்ளேயே தமிழகத்தை எவ்வளவு சீரழிக்க முடியும் என்பதை திமுக அரசு காண்பித்துள்ளது. எனவே, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சிறப்பு படை அமைத்து தமிழகத்தில் போதை பொருள் வினியோகத்தை தடுத்து இளைஞர்களை காக்க வேண்டும். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம். மாநில அரசுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பொருளாதார நெருக்கடி உள்ளது. மத்திய அரசு எந்த வகையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறது என்பதை முதலமைச்சர் விளக்கமாக சொன்னால் நல்லது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ. தி. மு. க. வுடன் கூட்டணி தொடரும்’ என்று கூறினார்.