ஓபிஎஸ் Vs இபிஎஸ் மோதல்…! பாஜக மேலிடத்தின் சிக்னல்..! குஷியில் சசிகலா
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையேயான மோதலை எட்ட நின்று பார்ப்பது என்ற பாஜகவின் தற்காலிக திட்டத்தை அறிந்த சசிகலா தரப்பு குஷியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையேயான மோதலை எட்ட நின்று பார்ப்பது என்ற பாஜகவின் தற்காலிக திட்டத்தை அறிந்த சசிகலா தரப்பு குஷியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தொடர்ந்து மோதலை வெளிக்காட்டி வருகிறது. இரட்டை தலைமை என்று கூறினாலும் யாருக்கு அதிகாரம் என்பதில் இருவரும் சமரசமாக இல்லை என்பதே உண்மை. சூரியனை பார்த்து என்ற எடப்பாடி பழனிசாமியின் பேச்சை அவர் ஆதரவு முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்ல, அவர் சார்ந்த சமுதாய மக்களும் விரும்பவில்லை என்று தெரிகிறது.
இருவருக்கும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மோதல் டெல்லி பாஜகவால் அவ்வப்போது பஞ்சாயத்து செய்யப்பட்டு பின்னர் இரட்டைகுழல் துப்பாக்கிகளாக இணைந்து செயல்படும் காட்சிகளை கட்சியினர் பார்த்துள்ளனர். எதற்கு எடுத்தாலும் டெல்லி பாஜக தலைமையின் சிக்னலை ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்ப்பது அவ்வளவு உசிதமானது அல்ல என்று பலரும் மறைமுகமாக அவரிடமும், இபிஎஸ்சிடம் கூறி உள்ளனர்.
ஆனாலும் அதிமுக ஆட்சி இருக்க வேண்டும் என்ற காரணத்தால் மோதல், பஞ்சாயத்து என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு இருந்து வந்தது. அதையே தான் டெல்லி பாஜக தலைமையும் விரும்பியது. அடுத்த 2024ம் ஆண்டு தேர்தலை நோக்கி பாஜக வேகமாக காய்களை நகர்த்தி வரும் தமிழகத்தில் உள்ள பாஜகவின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் வேறு மாதிரியாக இருந்து வருகிறது.
சசிகலாவை பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அவ்வளவு லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. டெல்லி தலைமையின் நிலைப்பாட்டை பற்றி அவர்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் நம்ப முடியாத வகையில் இருக்கிறது.
அதிமுகவில் நிலவும் அரசியல் கால தட்ப வெப்பநிலையை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பதாக பேச்சுகளும் எழுந்து வருகின்றன. இப்படிப்பட்ட தருணத்தில் தான் பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தும் வெளியில் வந்திருக்கிறது.
இது குறித்து கசிந்துள்ள தகவல்கள் பாஜகவின் தமிழக அரசியல் மற்றும் அதிமுக மீதான பார்வையை அப்பட்டமாக காட்டுவதாக உள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தமிழகத்தில் இரட்டை தலைமையில் அதிமுக இறங்கு முகத்தில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சற்று காலம் எட்ட நின்று பார்வையாளராக பாஜக இருந்தால் போதுமானது என்கிற ரீதியில் தமிழக தலைமையிடம் இருந்து டெல்லிக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாம்.
ஆளும் திமுகவுக்கு எதிராக எந்த பிரச்னை என்றாலும் அதிமுகவை விட பாஜக என்ன நினைக்கிறது? அதன் நிலைப்பாடும், கருத்தும் என்ன என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். இப்படிப்பட்ட தருணத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் கட்சியாக பாஜகவை மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர், அதிலும் செந்தில் பாலாஜி விஷயத்தில் பாஜகவின் எதிர்ப்பு குரல் அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்திருப்பதாக சொல்லப்பட்டு உள்ளதாம்.
ஓபிஎஸ், இபிஎஸ் மோதல், அவர்களது பிரச்னை என்பது போல ஒதுங்கி கொள்ளலாம், அதன் வெளிப்பாடாக இரண்டு தலைமை மீதும் அதிருப்தியில் இருப்பவர்களை பாஜக பக்கம் இழுக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளதாம். அதன் வெளிப்பாடு தான் சசிகலா பற்றிய அண்ணாமலையின் கடந்த சில நாட்களுக்கு வெளியான பேட்டி என்றும் இது ஆரம்பம் தான் என்றும் அடுத்த வரக்கூடிய காலஙகளில் இதுவரை அம்பயராக இருந்த பாஜக இனிமேல் பார்வையாளர்களாக இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர் நிலைமையை உன்னிப்பாக பார்த்து வருபவர்கள்…!!