தமிழகத்தில் பாஜகவுக்கு மட்டும் பாரபட்சமா..? அதிமுக மீது செம காண்டில் பாஜக..!
தமிழகத்தில் பிற கட்சிகளையெல்லாம் விடுத்து பாஜகவுக்கு மட்டும் தடை விதிப்பதில் பாரபட்சம் உள்ளது என பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏராளமான திட்டங்களை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராயின் பாடம் நீக்கப்பட்டது குறித்த அறிவிப்பில் ஏபிவிபி என எங்கும் குறிப்பிடவில்லை. எந்த அடிப்படையில் பாடத்தை பல்கலைக்கழகம் நீக்கியது என்பது தெரியவில்லை. ஆனால், அவசரம் அவசரம்மாக பாடத்தை மாற்றவில்லை. 4 ஆண்டுகள் கழித்துதான் பாடம் மாற்றப்பட்டுள்ளது. இதில் அரசியல் அழுத்தம் என்று எதுவும் இல்லை.
மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லவும், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மதம் இழிவுப்படுத்தப்படுவதை தடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே வேல் யாத்திரை நடத்தபடுகிறது. ஆனால், வேல் யாத்திரை ஏதோ சட்டத்துக்கு எதிராக நடப்பதைப் போல உருவகப்படுத்துகிறார்கள் அதில் துளியும் உண்மையில்லை. வேல் யாத்திரை நடத்தக் கூடாது என நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் வழக்கு போட்டால் வழக்கை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் . பிற கட்சிகளையெல்லாம் விடுத்து பாஜகவுக்கு மட்டும் தடை விதிப்பதில் பாரபட்சம் உள்ளது” என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வேல் யாத்திரை விவகாரத்தில் அதிமுக அரசை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். வானதி ஸ்ரீனிவாசனும் இந்த விவகாரத்தில் அதிமுக அரசை விமர்சித்தார்.