சூத்திரர்களை பற்றி பாஜக எம்.பியின் மநு பேச்சு... கடுங்கோபத்தில் திருமாவளவன்..!
சூத்திரர்களை மட்டும் சூத்திரர்கள் என அழைத்தால் கோபப்படுகிறார்கள் என்று பேசிய பாஜக எம்.பி. பிரக்யா தாகூரின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான பாஜக எம்.பி. பிரக்யா தாகூர், மத்தியப் பிரதேசத்தில் ஒரு மாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசும்போது, “பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்களை அந்தந்தப் பெயர்களில் அழைத்தால் அவர்கள் தவறாக எண்ணுவதில்லை. ஆனால் சூத்திரர்களை மட்டும் சூத்திரர்கள் என அழைத்தால் கோபப்படுகிறார்கள். இதைக் குற்றமாகக் கருதுவது ஏன்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரக்யா தாகூரின் இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன. ஏற்கனவே பலரும் அவரை கண்டித்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "மனுச்சட்டம் எங்கே உள்ளது என்று கேட்பவர்கள், பாஜக எம்.பி பிரக்யா தாகூரின் இந்தப் பேச்சைக் கவனிக்கவும். இவரை இப்படி பேசவைப்பதற்கு எது காரணம்? என்ன பின்னணி? மனுநூலின் தாக்கம் எந்த அளவுக்கு சனாதனவாதிகளை இன்றும் ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்!” என்று அதில் திருமாவளவன் கூறியுள்ளார்.