பாஜகவுக்கு பகிரங்க எச்சரிக்கை.. அரசியல் களத்தை தெறிக்க விடும் அமைச்சர் சேகர் பாபு..!
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் குறைகளை சுட்டிக்காட்டி இருந்தால் பாஜக நடுநிலையான கட்சி என கூறலாம். தங்களது இருப்பை காட்டிக்கொள்வதற்காக வேண்டும் என்றே, குறை கூறி வருகிறார்கள்.
அரசியல் களத்தில் அடையாளம் படுத்திக்கொள்வதற்காக பாஜக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருத்தேர் வீதியுலாவை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திருத்தேர் வீதியுலா வருவது தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் வழிகாட்டு முறைகளுக்கு உட்பட்டு கோவில்களில் வீதியுலா தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு கோவில்களில் உள்ள நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி கடந்த 13-ம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. நகைகளை உருக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவில் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு எவ்வளவு நகைகள் உருக்கப்பட்டுள்ளது? அதன் எடை என்பது என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கப்படும்.
மேலும், திருத்தணி கோயிலில் இந்த மாத இறுதியில் திருத்தேர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் குறைகளை சுட்டிக்காட்டி இருந்தால் பாஜக நடுநிலையான கட்சி என கூறலாம். தங்களது இருப்பை காட்டிக்கொள்வதற்காக வேண்டும் என்றே, குறை கூறி வருகிறார்கள். ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை கூறினால் அதற்கு தகுந்த முறையில் பதிலடி தரப்படும் என எச்சரித்துள்ளார்.