கேரள பாஜக.,வின் ஜன ரக்ஷ யாத்திரையில் உ.பி. முதல்வர் யோகி!
கேரளத்தில் நடைபெறும் ஜனரக்ஷ யாத்திரையில் பங்கேற்றுள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். சென்ற நூற்றாண்டில் சமுதாய தீண்டத்தகாமையைப் போக்க ஒரு யோகியாக நாராயண குரு வந்தார், இப்போது அரசியல் தீண்டாடமையைப் போக்க ஒரு யோகி வந்திருக்கிறார் என்று கேரளத்தில் பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது.
தென் மாநிலங்களில் தங்களின் கட்சி செல்வாக்கை உயர்த்திக் கொள்ள பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கேரளாவில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் பலன் நிச்சயம் தெரியவரும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதனால்தான், கேரளத்தில் பாஜக.,வுக்கு அல்லது கூட்டணிக்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத நிலையிலும், கேரளாவைச் சேர்ந்த அல்போன்ஸ் கண்ணந்தானம் அமைச்சர் ஆக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால், பெருமளவில் வன்முறைகள் நடத்தப்பட்டு, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் படுகொலைகள் நடத்தப் படுவதாகவும், இந்த வன்முறைகளைக் கண்டித்தும், அங்கே மக்கள் பாதுகாப்பு யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை பாஜக., துவங்கியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து நேற்று தொடங்கிய இந்த யாத்திரையை அமித் ஷா துவங்கி வைத்து, வெகு தொலைவுக்கு நடந்தே வந்தார். இதன் இரண்டாவது நாளான இன்று உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். இந்த யாத்திரையில் கலந்துகொண்ட யோகி ஆதித்யநாத்துக்கு போலீசார் கடும் பாதுகாப்பு அளித்தனர்.
கீச்சேரியில் துவங்கி, இன்று மாலை கண்ணூரில் நிறைவு பெறுகிறது இந்த யாத்திரை. இதில் 300க்கும் மேற்பட்ட பாஜக.,வினர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை இந்த யாத்திரை நிறைவில் யோகி ஆதித்யநாத் உரையாற்றுகிறார்.
आज केरल के कन्नूर में भाजपा की #JanaRakshaYatra का शुभारंभ किया। pic.twitter.com/2JxnlUKrjB
— Yogi Adityanath (@myogiadityanath) October 4, 2017