ரத்தக் காட்டேறி.. மதவெறி தீயசக்தி.. பேராயர் எஸ்றா சற்குணத்தை குண்டாஸில் தூக்கிப் போடுங்க.. ஹெச். ராஜா ஆவேசம்!
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய பேராயர் எஸ்றா சற்குணத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய முன்னாள் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டம் தொடர்பான போராட்டத்தில் பங்கேற்ற பேராயர் எஸ்றா சற்குணம் பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார். “அந்த ஆள் (மோடி) கடவுளை பற்றி பேசுகிறாரே தவிர, கடவுள் பயம் கிடையாது; மனித பயமும் கிடையாது. இந்த நாட்டை ஆள்கிற தகுதி அவருக்கு இல்லை. இந்த நாட்டிலிருந்து அவர் அகற்றப்படுகிற வரை, கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். அவருக்கு கஷ்டம், நஷ்டம் என எதுவும் தெரியவில்லை.” எனப் பேசியிருந்தார்.
சற்குணத்தின் இந்தப் பேச்சுக்கு பாஜக தேசிய முன்னாள் செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து பேசிய அவர், “வேளாண் மசோதா ஷரத்தில் குறைபாடு இருக்கிறது என்று யாராவது பேசினால் அதை வரவேற்கலாம். அதற்கான தீர்வை காணலாம். அதுதான் ஜனநாயகத்தின் இயல்பு. ஆனால், பாரதப் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் அவதூறாகவும் சட்டம் பற்றிய பொய் பிரசாரத்தையே செய்கிறார்கள். மதவெறி சக்திகள், பிரிவினைவாதிகள் அதில் பங்கேற்கிறார்கள்.
எஸ்றா சற்குணம் என்ற ரத்த வெறிபிடித்த ரத்தக் காட்டேறி, மதவெறி தீயசக்தி. இவர் யார் என்றால், இந்து மதமே கிடையாது. ஹிந்துக்கள் முகத்தில் குத்துவிட வேண்டும், ரத்தம் வர வேண்டும் எனப் பேசியவர். இவர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியுள்ளார். விவசாயிகள் சங்க கூட்டத்தில் இவருக்கு என்ன வேலை. இவர் சர்ச்சில் போய் ஊழியம் செய்யட்டும். எஸ்றா சற்குணம் ஒரு மத வெறியர். தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு எதிராகவும் பேசி வரும் எஸ்றா சற்குணத்தை நிரந்தரமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.