தமிழக நிலங்களை ஆக்கிரமிக்கும் கேரள அரசு..! கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசும் திமுக- இறங்கி அடிக்கும் பாஜக
தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, மறு ஆய்வு பணியினை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என பாஜக வலியுறுத்தியுள்ளது.

தேனியில் கேரள அரசு நில அளவீடு
கேரளாவில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கேரள அரசு எல்லை மறு அளவீடு செய்வதாக கூறி தமிழக நிலங்களை கேரளாவிற்கு சொந்தமானது என பதிவு செய்து பலகைகள் வைக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வருகிறது . இது தொடர்பாக தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் என ஆக்கிரமித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பல லட்சம் ஏக்கர் அபகரிப்பு
குறிப்பாக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல நிலங்களில் வலுக்கட்டாயமாக, 'இது கேரள மாநிலத்திற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையை வைத்து செல்வது நில ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டம். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி வளைத்து போட முயற்சி செய்வதை தமிழக அரசு கண்டிக்காமல் அமைதி காப்பது முறையல்ல. இது குறித்து நேற்று .தமிழக வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் விரைவில் இரு மாநில அரசுகளும் இணைந்து மறு ஆய்வு நடத்தும் என்றும் கூறியுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது.'வரும் முன் காப்போம்' என்றவர்கள் 'போன பின் பார்ப்போம்' என்று அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு விழித்துகொள்ள வேண்டும்
உடனடியாக தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, மறு ஆய்வு பணியினை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த திமுக அரசு இப்போதாவது விழித்து கொண்டு தமிழர்களுக்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டி கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
தேனி எம்பி ரவீந்திரநாத் தலைமையில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்..! புறக்கணித்த திமுக எம்எல்ஏக்கள்..

