அம்பலமானது மர்ம கூட்டணி; பாஜக-அதிமுகாவை கிழித்து தொங்கவிடும் ஸ்டாலின்!!!
ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பாஜகவை ஆதரிக்கிறார் என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வருமான வரி சோதனையில் மிரண்டு மத்திய அரசு அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக-அதிமுக இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டதாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் சம்பந்தி நிறுவனத்தில் வருமான வரி சோதனை பாஜக உள்நோக்கம் நிறைவேறிவிட்டது. தேர்தல் வந்தால் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமிக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை வம்படியாக அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு சட்டமன்றம் அனுப்பிய நீட் மசோதோக்களுக்கும் குடியரசுத் தலைவர் அனுமதி பெறாமல் அலைக்கழித்து, தமிழில் நீட் தேர்வு எழுதிய ஒரே "பாவத்திற்காக" தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, அநீதி இழைத்துள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தங்களின் அரசியல் காரணங்களுக்காக வரலாறு காணாத தாமதத்தை உருவாக்கியதும், 15 ஆவது நிதி ஆணையத்தின் மூலம் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கீட்டையே அடியோடு குறைக்கும் முயற்சியில் இறங்கி, உயர் கல்வி ஆணையத்தை அமைத்து மாநில உரிமைகளைப் பறிக்க முற்படுவதோடு மட்டுமின்றி உயர்கல்வியில் சமூக நீதியைச் சீர்குலைக்கும் இழிவான முயற்சியிலும் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது. அணை பாதுகாப்புச் சட்டம் என்று கூறி மாநிலத்தில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டைக் கூட எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஒட்டு மொத்தமாக மாநிலத்தின் அதிகாரங்களை அப்படியே அபகரித்து சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது
மத்திய பா.ஜ.க அரசு. தமிழகத்திற்கு எந்தவொரு முக்கியத் திட்டங்களுக்கோ, நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கோ, அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கோ நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. வர்தா புயல், சென்னைப் பெருவெள்ளம், ஒக்கி புயல் என்று கேட்ட எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய திட்டங்கள் மற்றும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது உள்ளிட்டவற்றில் 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதியை மத்திய அரசு இன்னும் கொடுக்கவில்லை.
ஆனாலும் தன் சம்பந்தியின் "பார்ட்னர்" வருமான வரித்துறை சோதனையில் சிக்கிக் கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, தன்னை எப்படியாவது ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்று சுயநலத்தின் உச்சமாக விண்ணப்பம் வைத்திருக்கிறார் முதல்வர். அந்த பேரம் உண்மை என்பது நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க மேற்கொண்டுள்ள பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் எதிரொலித்துள்ளது.
ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டு, மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்திருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசையும் மறைந்திருந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதால், தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். ஊழல் அ.தி.மு.க.வுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் திமுக அனுமதிக்காது என அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.