Bharathiyar University vc arrest in coimbatore

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசியர் பணி நியமனம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அந்த பல்கலைக்காகத்தின் துணை வேந்தர் கணபதி கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

திருச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற கணபதி, அப்பல்கலைக்கழகத்தில் உதவி போராசிரியராக தனது பணியைத் தொடங்கினார்.

பின்னர் அவர் உயரி தொழில்நுட்ப துறை தலைவராக பணியாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக கணபதி நியமிக்கப்பட்டார்.

கணபதி பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்துள்ளார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்துக்காக தொடர்ந்து அவர் லஞ்சம் பெற்று வருதாக புகார் எழுந்து வந்தது.

துறைத் தலைவர், பேராசிரியர், உதவி போராசிரியர், அலுவலக உதவியாளர் என ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் தனித்தனியாக ரேட் நியமித்து இடைத் தரகர்கள் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதையடுத்து பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் பெறப்படுவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில்தான் , கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுரேஷ், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய ஒரு லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் 29 லட்சத்திற்கு காசோலையும் கொடுத்து துணைவேந்தரிடம் சுரேஷை கொடுக்க சொல்லியுள்ளனர்.

அதன்படி, சுரேஷிடம் இருந்து துணைவேந்தர் கணபதி இன்று அலுவலகத்தில் வைத்து லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து கணபதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணபதியிட்ம் பயின்று இதுவரை 32 பேர் பி.ஹெச்டி பட்டமும் 42 பேர் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளனர். உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக பல்வேறு நிறுவனங்கள் கணபதியிடம் 4 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளன. இந்த நிதியை முறையாக ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினாரா ? என்றும் லஞ்சு ஓழிப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்