bharathiraja surprise about protest against ipl

சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிராக மாலை 5 மணிக்கு அண்ணா சாலையில் கூட இருப்பதாகவும் அதன்பிறகான விஷயங்கள் குறித்து எதுவும் கூற முடியாது எனவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் போராடிவருகின்றனர். காவிரிக்காக தமிழர்கள் போராட்ட களத்தில் ஒன்றிணைந்துள்ள இந்த நேரத்தில், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற குரல்கள் வலுத்துள்ளன.

சீமான், வேல்முருகன் உள்ளிட்டோரும் பாரதிராஜா, சத்யராஜ், அமீர், தங்கர்பச்சன், வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட திரைத்துறையினரும் சென்னையில ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. எதிர்ப்புகளை மீறி இன்றைய போட்டி நடந்தால், மைதானத்தை முற்றுகையிடுவோம் என வேல்முருகன் உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர்.

நேற்று பாரதிராஜா, அமீர், சத்யராஜ், தங்கர்பச்சன், வெற்றிமாறன், கௌதமன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, ஐபிஎல்லை புறக்கணிக்க வேண்டும் எனவும் மீறி நடந்தால் போராடுவோமெ எனவும் தெரிவித்தனர். ஆனால், எந்த மாதிரியான போராட்டம் என்பதை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை தேனாம்பேட்டையில், பாரதிராஜா, அமீர், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், தமிமுன் அன்சாரி, தங்கர் பச்சன், தனியரசு உள்ளிட்டோர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கட்சி மற்றும் அமைப்புகளை கடந்து தமிழர்களாக இன்று மாலை 5 மணிக்கு ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் ஒன்று கூடி போராட உள்ளோம். அதன்பிறகு என்ன நடக்கிறது, எங்களது நடவடிக்கைகள் என்ன என்பதை அப்போது தெரிந்துகொள்ளுங்கள் என தெரிவித்தார்.

மேலும், என்ன மாதிரியான போராட்டம் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் சண்டைக்கு போகும்போது கத்தியை ஒழிச்சு வச்சுருப்பேன்.. நீங்க வந்து, கத்தியை எங்கே வச்சுருக்கீங்கனு கேட்டா, நான் எப்படி சொல்வேன் என பதிலளித்தார்.