ஜெ.வுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : பிரதமரிடம் முதல்வர் ஓபிஎஸ் நேரில் வலியுறுத்த முடிவு!
நாளை பிரதமரை சந்திக்கும் போது புயல் சேதத்துக்கான நிவாரண கோரிக்கையுடன் கூடுதலாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிகிறது.
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூரை கடுமையாக தாக்கிய வர்தா புயலால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.1000 கோடி ரூபாயை தமிழக அரசு கோரியது.
மத்திய அராசு ரூ.500 கோடி ஒதுக்கியது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் புயல் நிவாரண தொகை கோரவும் சேதத்தை பார்வையிட குழு அமைக்க கோரியும் பிரதமர் மோடியை நாளை ஒ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளார்.
இதையடுத்து இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். நாளை டெல்லி புறப்பட்டு செல்லும் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
மேலும் பிரதமரை முதல்வர் சந்திக்கும்போது ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா சிலை வைக்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.