ஒரு வீடியோ... இரண்டு பட்ட குடும்பம்... உச்ச கட்டத்தில் மோதல்..!
புதன் கிழமை இன்று காலை பரபரப்பாக ஒவ்வொருவரின் நாளையும் ஆக்கிய விஷயம், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்ட வீடியோ தான்!
டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல், இன்று காலை பத்திரிகையாளர்களிடம் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஜெயலலிதா படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்றபடி, ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் கண்டனம் கூற, அந்த வீடியோவை இனி ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது.
இத்தகைய களேபரங்களில் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்டாலும், இந்த வீடியோ வெளியிடக் காரணமாக அமைந்த தினகரன் குடும்பத்தில், அதாவது சசிகலா குடும்பத்திலேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
ஒரு வீடியோவால், இப்போது குடும்பம் இரண்டு பட்டுள்ளது என்பதுதான் இப்போதைய பரபரப்பு. அது, சசிகலா - இளவரசி குடும்பத்தினர் இடையே இந்த வீடியோ தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பதுதான்.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் வெளியிட்டது தொடர்பாக வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா குற்றம் சாட்டிய நிலையில் சசிகலா அண்ணன் மகன் ஜெயானந்த் வெற்றிவேலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இன்று காலை வீடியோ காட்சிகள் வெளியான பிறகு தினகரன் தரப்பு செய்திகளை ஜெயா டிவி புறக்கணித்த நிலையில், இரு குடும்பத்தினரின் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
ஜெயலலிதாவை சசிகலா ஏதோ செய்துவிட்டார் என்று அரசியல் செய்தவர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வரவேற்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியிருந்தார்.
ஆனால், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை இந்த நேரத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
கொலைப்பழி வந்தபோது கூட சசிகலா வீடியோவை வெளியிடவில்லை. வெற்றிவேல் மீது டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்... என்று பொருமித் தள்ளினார் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா.
நாளை தேர்தலை வைத்துக்கொண்டு, சுயநலத்திற்காக ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறி, கிருஷ்ணப்ரியா இந்தக் குடும்ப மோதலைத் துவக்கி வைக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சசிகலா அண்ணன் மகன் ஜெயானந்த் அந்த மோதலை அடுத்த கட்டத்துக் கொண்டு சென்றுவிட்டார்.