கொரோனா தொற்றுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வாருங்கள் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக இந்தியா தற்போது மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தை கவனமாகக் கவனித்துக் கொள்ளவேண்டும். முக்கியமாக வீட்டில் உள்ள வயதானவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பராமரிக்கவும் வேண்டும். சானிடைசர், சோப்பு மூலம் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். தமிழகத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் தமிழக மக்களின் ஒத்துழைப்பையும் பாராட்டுகிறேன். அதே வேளையில், இச்சூழ்நிலையைச் சமாளிக்க தமிழக அரசு வழங்கிய அறிவுறுத்தல்கள், கட்டுப்பாடுகளை அனைவரும் ஒத்துழைத்து பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வாருங்கள்” என்று அறிக்கையில் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
