’நம்ம கட்சிகாரன் வயிறு எரியுது’.. ’முதல்வர் வரும்போது பூ தூவி வரவேற்கனும்’.. உத்தரவு போட்ட துரைமுருகன்.
முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் வரும்போது கட்சி சார்பில் கொடி பேனர்கள் வைக்கக்கூடாது என திமுக பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்
.
முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் வரும்போது கட்சி சார்பில் கொடி பேனர்கள் வைக்கக்கூடாது என திமுக பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, அவற்றை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் கட்சிகள் பாகுபாடின்றி போஸ்டர், பேனர், கொடிக்கம்பம் போன்றவற்றை நடுவதில் சட்டல் மீறல்கள் இருந்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் தொண்டர்கள் போஸ்டர் பேனர் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதை எல்லாம் மீறி கொடி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் வரும் 21ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க வேலூர் வருகிறார். அதற்கான ஆலோசனை கூட்டம் வேலூர் அரியூர் இல் நடந்தது.
அதில் நீர்வளத் துறை அமைச்சர் பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்று விட்டார்கள், இந்த கடன் சுமையுடன் ஆட்சிபீடத்தில் முதல்வர் ஸ்டாலின் உட்கார்ந்து உள்ளார். நிதிநிலை கஷ்டத்தை மக்களிடம் கூற முடியாது, ஆனால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என முதல்வருக்கு தெரியும், தமிழக முதலமைச்சர் வேலூர் வரும்போது வழிநெடுகிலும் மலர்களை தூவி வரவேற்க வேண்டும். கொடிகள், தோரணங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் தீர்மானங்களில் கையெழுத்து போட மாட்டேன் என ஆளுநர் பிடிவாதம் காட்டுகிறார்.
அதாவது கூட்டுறவுத்துறையில் பதவி காலம் மூன்று ஆண்டுகள் என குறைத்து தீர்மானம் நிறைவேற்றி, கூட்டுறவு சங்க ங்களை களைத்த தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. அதை ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம், ஆனால் அதில் கையெழுத்து போட மாட்டேன் என ஆளுநர் பிடிவாதமாக இருந்து வருகிறார். கூட்டுறவு சங்க பதவிகளில் பெரும்பாலும் எதிர்க்கட்சியினர் உள்ளனர். நமது கட்சிக்காரர்கள் வயிறு எரிகின்றனர். கூடிய விரைவில் கவர்னர் கையொப்பம் இடவில்லை என்றால் அதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டி வரும், இவ்வாறு அவர் பேசினார்.