பெங்களூரு பெண் துணை மேயர் ரமிலா திடீர் மரணம்… பதவியேற்ற 2 நாட்களில் மாரடைப்பால் உயிரிழ்ந்த சோகம்…
பெங்களூரு நகரத்தின் துணை மேயராக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக் கொண்ட ரமிலா உமாசங்கர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 44.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெங்களூரு கோவிந்தராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் காவேரிபுரா வார்டில் இருந்து ரமிலா உமா சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி ரமிலா துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி துணை மேயராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெஞ்சு வலிப்பதாக கூறி தன்னுடைய குடும்பத்தினரை எழுப்பியுள்ளார் ரமிலா. இதனையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய மருத்துவர்கள், 2 மணிக்கு ரமிலா இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
நேற்று முன் தினம்தான் துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வராவுடன் கே.ஆர்.மார்க்கெட்டை ஆய்வு செய்த ரமிலா, முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.