அத்திவரதரை தரிசிக்க சென்று நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேர் !! தலா ஒரு லட்சம் நிவாரணம் அறிவிப்பு !!
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பிரசித்தி பெற்ற வைபவமான அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த 1979-இல் நடந்தது.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
18 ஆவது நாள் வைபவமான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடையில் அருள்பாலித்தார். இன்று ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர்.
லட்சக்கணக்கானோர் திரண்டதால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு முந்திக் கொண்டு செல்ல முயன்றதால் கூட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கினர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த நாராயணி , நடராஜன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கங்காலட்சுமி , சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.