18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லுமா? செல்லாதா? அனைத்து தரப்பு வாதங்களின் விவரம்
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டன.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு 18 எம்.எல்.ஏக்களுக்கும் பேரவை செயலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்க எம்.எல்.ஏக்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், இதற்கிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார்.
இந்த தகுதிநீக்கத்தை எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்றுடன் முடிந்தது. எம்.எல்.ஏக்கள், முதல்வர், பேரவை செயலாளர் என அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை முன்வைத்துள்ளனர்.
எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்:
முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுக்கப்பட்டதே தவிர அதிமுகவை விட்டு வேறு கட்சிக்கு தாவவில்லை. மேலும் பேரவை செயலரின் நோட்டீஸிற்கு விளக்கமளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், வேறு கட்சிக்கு தாவாத போதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்துள்ளனர். எந்த கட்சிக்கும் தாவாத போது எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும். எனவே தகுதிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
முதல்வர் தரப்பு வாதம்:
முதல்வருக்கு எதிரான நிலைப்பாடு இருந்தால், அது கட்சி பிரச்னை. எனவே அதை கட்சிக்குள் வைத்து முடித்திருக்க வேண்டுமே தவிர கட்சிக்கு வெளியே கொண்டு சென்றிருக்க கூடாது.
அப்படி கட்சிக்கு வெளியே கொண்டு சென்றாலே கட்சியிலிருந்து பிரிந்து செல்கிறார்கள் என்றுதான் அர்த்தம். எனவே கட்சி தாவல் தடை சட்டத்தின்படி சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என முதல்வர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பேரவை செயலர் தரப்பு வாதம்:
முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக 18 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏக்கள் தரப்பில் பதிலளிக்காமல், இழுத்துக்கொண்டே இருந்தனர். அதனால் சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தார்.
இவ்வாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.