பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா.. மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக - திமுக எம்.எல்.ஏ..
அரசு பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் திமுக எம்எல்ஏ வும் அதிமுக எம்எல்ஏ வும் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா தாசிரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க:விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்களே சாட்சியம்.. கேராளவில் பிரதமர் மோடி பேச்சு..
இந்நிலையில் தகவலறிந்து விழா நடைபெறும் இடத்திற்கு வந்த அதிமுக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மேடையில் இருந்த திமுக எம்எல்ஏ தேவராஜ் , திமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சூரியகுமார் ஆகியோரிடம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எப்படி வர முடியும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க:குஜராத் தான் முதலிடம்.. போதைப் பொருள் பரவலுக்கு மத்திய அரசு தான் காரணம்.. அமைச்சர் பொன்முடி விளாசல்
இதனையடுத்து திமுகவினர் அவரை சமாதானம் செய்து மேடையில் அமர செய்தனர். ஆனாலும் அதனை மறுத்த அதிமுக எம்.எல்.ஏ செந்தில்குமார், அவருடன் வந்த கட்சி தொண்டர்களுடன் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். மாணவர்கள் முன்னிலையிலேயே விழா மேடையில் அதிமுகவினரும் திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.