விவசாயி ஒருவர் காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி அந்த விவசாயிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், அகரம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. தனது விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகளை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு சென்று கொண்டிருந்தார். வெங்கல் பகுதியில் வந்தபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி ஊரடங்கு உத்தரவால் சந்தைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கார்த்தி காய்கறிகளை சாலையில் கொட்டி வேதனையை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கார்த்திக், காய்கறி விற்பனைக்காக அடிக்கடி சென்னை சென்று வருவதால் கொரோனா பரவும் அச்சம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததாலேயே அவரை கைதுசெய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த விவசாயியை நேரில் சந்தித்து, மாவட்ட எஸ்.பி அரவிந்தன் மன்னிப்பு கோரியுள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

