மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மாநில அரசுக்கு நல்லது… இது அட்வைஸா? அலர்டா? அண்ணாமலை கூறுவது என்ன?
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி நேரடியாக வர வேண்டும் எனத் தமிழக அரசு தான் வலியுறுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி நேரடியாக வர வேண்டும் எனத் தமிழக அரசு தான் வலியுறுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்திருந்தது. இதன் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 கல்லூரிகளையும் திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். பிரதமரை வரவேற்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகியுள்ளது. இந்த நிலையில் திமுக மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என திமுக அமைப்புச் செயலாலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இதனால் எதிர்க்கட்சியாக இருந்த போது கருப்புக்கொடி காட்டி, பலூன் விட்ட திமுக, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மத்திய அரசிடம் பணிந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. கூட்டணிக் கட்சிகளும் திமுக எடுத்த நிலைப்பாட்டை தான் எடுத்திருக்கின்றன. விசிக தலைவர் திருமாவளவன், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் நேரத்தில் இருப்போம்; எதிர்க்கும் நேரத்தில் எதிர்ப்போம் என்று தெரிவித்தார். இதுதொடர்பாகப் பேசியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி நேரடியாக வர வேண்டும் எனத் தமிழக அரசு தான் வலியுறுத்தியது. இதுதொடர்பாக பாஜக தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை இல்லை. பிரதமர் மோடி தமிழகம் வந்தால் அவரை வரவேற்றுக் கண்டிப்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பிரதமருக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பொங்கல் விழா நடத்தப்பட்டால் தமிழக மக்களுடைய கலாசாரத்திற்குப் பிரதமர் கௌரவம் கொடுக்கும் விதமாகத் தான் இருக்கும். இதை விமர்சனம் செய்வது நியாயமற்றது. ஆட்சி பொறுப்பேற்று பின்னரும் கடந்த 3 மாதங்களில் எதிர்க்கட்சி போன்றே திமுக அரசு செயல்படுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எப்படி நடந்து கொண்டதோ அதே போன்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பும் மத்திய அரசு அதே போல் செயல்படுகிறது. தமிழக அரசு புரிந்துகொண்டு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மாநில அரசுக்கு நல்லது. திமுக அரசின் தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் உட்பட அனைவரும் பிரதமர் எப்போது தமிழகம் வந்தாலும் அனைவரும் வரவேற்க வேண்டும். பிரதமர் வருவதென்பது தமிழ்நாட்டின் நலனிற்காக மட்டுமே என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.