anbumani warning for protest
அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சமாக ரூ.9 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புறநகர் மாவட்டங்களைப் பொறுத்தவரை நகரப்பகுதிகளில் இயங்கும் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் ரூ.1 முதல் ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
சென்னையிலும், புறநகரங்களிலும் ரூ.3 ஆக இருந்த நகரப் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணம் இப்போது ரூ. 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், புறநகரப் பேருந்துகளின் கட்டணமும் ரூ.2 முதல் ரூ.40 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளைப் பொறுத்தவரை சில வழித்தடங்களில் ரூ.90 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பினாமி அரசின் இம்மோசடி கடுமையாக கண்டிக்கத்தக்கது.
விரைவுப் பேருந்துகளாகவும், சொகுசுப் பேருந்துகளாகவும் பெயர்பலகை வண்ணத்தை மட்டும் மாற்றி விட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் சாத்தியமாகும்.
கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அறிவிக்காமலேயே அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது வழிப்பறிக்கு சமமான செயலாகும்.
ஒரு வாரத்திற்குள் கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
