போலீசை ஏவி கொடூரமாக காவு வாங்கிவிட்டு... அவப்பெயரைத் துடைக்க இப்படி ஒரு அறிவிப்பா? ஆறவிட்டு வெச்சு செய்யும் அன்புமணி
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் 14 பேரை காவல்துறையை ஏவி கொடூரமாக படுகொலை செய்ததால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்துக் கொள்ளவே இப்படி ஓர் ஆணையை அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இது யாருக்கும் பயனளிக்காத, அப்பட்டமான ஏமாற்று வேலையாகும்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை புதுப்பிக்க கடந்த மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடும்படி கடந்த மே 23-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டது. அதன்படி ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை அடிப்படையாகக் கொண்டு, அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணை சட்டத்தின் முன் நிற்காது என்பது தான் உண்மையாகும். ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டக் காரணம் வலுவற்றதாகும்.
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகளில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஈடுபட்டிருந்தாகவும், இதை கடந்த 18,19 ஆகிய தேதிகளில் ஆலையை ஆய்வு செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் அதனடிப்படையில் ஆலையை மூட ஆணையிட்டதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே குற்றச்சாற்றின் அடிப்படையில் தான் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காய்கறி வெட்டுவதற்காக கத்தி வாங்கிச் செல்பவரை கொலைச் சதியில் கைது செய்வதற்கு இணையான, யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாற்று இதுவாகும். இந்நடவடிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே அமையும்.
ஓர் ஆலையை மூடுவது எளிதான ஒன்றல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது Speaking order-க்கு இணையாக விரிவான காரணங்களை பட்டியலிட்டிருக்க வேண்டும். ஒரு பத்தியில் அரசாணை பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை. இதைக் காரணம் காட்டியே ஆலையை மூடியிருக்கலாம்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அத்தகைய விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களையும் பதிவு செய்து அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக Speaking order பிறப்பித்து இருந்தால் அது மிகவும் வலிமையானதாக இருந்திருக்கும். அதை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையால் வெற்றி பெற முடியாது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உள்ளன. நீதிமன்றங்களையும், அரசையும், அந்நிறுவனம் ஏமாற்றி…