Amruta has filed a case

ஜெயலலிதாவுக்கு ஷைலஜா என்ற சகோதரி கிடையாது என்றும் தமது பாட்டி சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா மட்டுமே வாரிசுகள் என்றும் ஜெ அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.

அதன்படி, அம்ருதா மற்றும் ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அவர்கள் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள் எனவும் ஜெயலலிதாவை அவர் சார்ந்த வைஷ்ணவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். அதனால் அவரது உடலை தோண்டி எடுத்து ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வாரிசு என கோரும் வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும். ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் அவரது இரத்த மாதிரிகள் உள்ளனவா? என கேள்வி எழுப்பியது. 

அதற்கு அரசிடம் கேட்டு சொல்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். இந்நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஷைலஜா என்ற சகோதரி கிடையாது என்று தீபக் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமது பாட்டி சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா மட்டுமே வாரிசுகள் என்று தீபக் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா சொத்துக்காக தான் அம்ருதா வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.