அம்மா ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கலையா? கவலைப்படாதீங்க… மேலும் ஒரு வாய்ப்பு !!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் சுயமாக தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்திட்டம் தற்போது செய்லபடுத்தப்பட்டு வருகிறது. மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு கடந்த 22-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வந்தன தமிழகம் முழுவதும் 1 லட்சம் பெண்களுக்கு முதல் கட்டமாக ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது முதல் மானிய விலை ஸ்கூட்டர் வாங்குவதற்கு பெண்களிடையே ஆர்வம் அதிகரித்தது. தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் வாங்க பெண்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர்.
இந்த விண்ணப்பத்துடன் பணிபுரியும் நிறுவனத்தின் கடிதம், டிரைவிங் லைசென்ஸ் அல்லது பழகுனர் ஓட்டுனர் உரிமம் , வருவாய் சான்றிதழ், கல்வி சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்ததது. நேற்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். காலை 6 மணிக்கே மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வரிசையில் காத்து நின்றனர். நேரம் செல்லச் செல்ல வரிசை நீண்டு கொண்டே சென்றது.
ஆனாலும் ஏராளமான பெண்கள் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். விண்ணப்பம் செய்வதற்கான கெடு தேதியை இன்னும் கொஞ்ச நாள் தள்ளி வைக்கலாம் என பல பெண்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.