ஆறே மாசத்தில் அடித்து தூக்கிய அமித்ஷா...!! அடித்த அடியில் கேபினட்டில் நம்பர் ஒன் அந்தஸ்தை பிடித்தார்...!!
அமித்ஷாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக சுமார் 42 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் .
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களில் சிறப்பாக செயல்படும், அமைச்சர் என்ற அந்தஸ்தை அமித்ஷா பெற்றுள்ளார் , ஆங்கில செய்தித்தாள் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தகவல் வெளியாகி உள்ளது . அமித்ஷா என்றாலே அதிரடி தான் , கொண்டுவரும் திட்டத்தில் உறுதியாக நின்று அதை நடத்திக் காட்டக்கூடிய நெஞ்சுரம் கொண்டவர் . சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பின்னர் பாஜகவின் இரும்பு மனிதர் எனறு அக்கட்சியினர் வர்ணிக்கக் கூடிய அளவிற்கு செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்து வருகிறார் அவர் . உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை முழுவதுமாக இந்தியாவுடன் இணைத்தது அமித்ஷா துணிவு மிக்க அரசியல் ஆளுமை என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தியது.
இந்நிலையில் மிகச் சிறப்பாக செயல்படும் அமைச்சர் என்ற அந்தஸ்தையும் அவரின் அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு பெற்றுத் தந்துள்ளது . ஆங்கில பத்திரிக்கை ஒன்று சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. வடக்கு , கிழக்கு , தெற்கு , மேற்கு , மத்திய இந்தியா என ஐந்து மண்டலங்களில் வெவ்வேறு பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட அதில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது , சுமார் 19 மாநிலங்களில் 194 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய 97 நாடாளுமன்ற தொகுதிகளில் அந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது, அதில் 12, 141 பேரிடம் நேரடியாகவே கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் மோடி தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர் யார் என்ற கேள்விக்கு அதிகம் பேர, உள்துறை அமைச்சர் அமித்ஷா என பதில் அளித்துள்ளனர். மத்திய அமைச்சரவையில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைச்சர் என்பதில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். அமித்ஷாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக சுமார் 42 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் .
குறிப்பாக காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, குடியுரிமைச் சட்டத்திருத்தம் அமல்படுத்தியது , உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அவர் எடுத்ததாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . அதேபோல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தலா 39 சதவீதம் மக்களின் ஆதரவு பெற்று இரண்டாமிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் , அதற்கடுத்து 26 சதவீத மக்களின் ஆதரவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4-வது இடத்திலும் பியூஸ் கோயல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர் . இந்த வரிசையில் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆறாவது இடத்திலும் ரவிசங்கர் பிரசாத் ஏழாவது இடத்தையும் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மத்தியஅரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தம் நாடுமுழுவதும் எதிர்ப்பை பெற்றிருந்தாலும் அதை அமித்ஷா கொண்டு வந்ததற்காக அவருக்கு 43 சதவீதம் மக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது