சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஒரு மணி நேரமாக வராத ஆம்புலன்ஸ்!! உயிருக்கு போராடிய இளைஞர் பரிதாப மரணம்
புதுக்கோட்டை அருகே ஒருமணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், விபத்தில் சிக்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குப்பிடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். நேற்று மாலை தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள இச்சடி என்ற இடத்தின் அருகே, ஜெயக்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணல் ஏற்றிவந்த மினிவேன் இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் ஜெயக்குமார் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக 108 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தகவல் அளித்து ஒருமணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சில கிமீ தொலைவில்தான் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. அப்படி இருந்தும் கூட ஒருமணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவசர தேவையை உணர்ந்து செயல்பட வேண்டிய ஆம்புலன்ஸ் சேவை, அலட்சியமாக செயல்பட்டதுதான் இளைஞரின் மரணத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது என்று மார்தட்டும் அந்த துறையின் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையிலே இந்த நிலைதான் எனவும் மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.