ஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..!
பாஜகவைத் தோற்கடிக்க எல்லோரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம். எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சோனியாகாந்தி என்னை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். அப்போது ராகுல்காந்தியும் உடன் இருந்தார். நாங்கள் எல்லோரும் அரசியல் நிலைமை, பெகாசஸ் விவகாரம், கொரோனா நிலவரம் பற்றி விவாதித்தோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. எதிர்காலத்தில் நேர்மறையான முடிவு வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுப்பட வேண்டும் என்று சோனியாகாந்தி விரும்புகிறார். மாநில கட்சிகளை காங்கிரஸ் பெரிதும் நம்புகிறது. மாநில கட்சிகளும் காங்கிரஸை நம்புகின்றன. தற்போது பாஜக வலிமையான கட்சியாக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் நிச்சயம் வரலாறு படைக்கலாம். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு அதுவே நம்பிக்கையாகும். 2019-இல் நரேந்திர மோடி பிரபலமாக இருந்தார். இப்போது அப்படியல்ல. இன்று கொரோனா உயிரிழப்புகள் பற்றிய பதிவுகள்கூட வைத்திருக்கவில்லை. அவர்களுடைய இறுதி சடங்குகள் மறுக்கப்பட்டன. உடல்கள் கங்கை நதியில் வீசப்பட்டன. அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அதை மறந்து மன்னிக்க மாட்டார்கள்.
என்னுடைய செல்போன் ஏற்கனவே ஒட்டுகேட்கப்பட்டிருக்கிறது. பெகாசஸ் அனைவருடைய உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பெகாசஸ் உளவு விவாகரத்துக்கு பாஜக அரசு ஏன் பதில் அளிக்கவில்லை? ஆனால், இதை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், அதுதொடர்பான விவாதங்கள் நடத்தப்படாவிட்டால், அது எங்கே நடக்கும்? விவாதங்கள் தேநீர் கடைகளில் நடத்தப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில்தான் நடைபெற வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் முகமாக நான் இருப்பேனா என்று கூற நான் அரசியல் ஜோதிடர் அல்ல. அதெல்லாம் அப்போதைய நிலைமையைப் பொறுத்தது. இன்று சோனியாகாந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரைச் சந்தித்துள்ளேன். நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பிறகு, எதிர்க்கட்சிகள் சந்திக்க வேண்டும். பாஜகவைத் தோற்கடிக்க எல்லோரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம். தனியாக, நான் ஒன்றுமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனவே நான் ஒரு தலைவர் அல்ல. அதில் நான் ஒரு கேடர். நான் தெருவிலிருந்து வந்த ஒரு நபர்” என்று மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.