உத்தரப்பிரதேச வளர்ச்சி குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தயாரா என்று அம்மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேர்தல் பிரசாரம்

உத்தரப்பிரதேசத்தில் 5-வது கட்ட தேர்தலையொட்டி முதல் அமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பல்ராம்பூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டின் மிகப்பெரும் பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ஆனால் என்னைப் போன்றவர்களிடம் அவர் மோதிக் கொண்டிருக்கிறார்.

மோடி விரும்பினால் உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை தவிர்த்து மற்ற விஷயங்கள் பற்றி அவர் பிரசாரம் மேற்கொள்ளட்டும். அவர் விரும்பினால் உத்தரப்பிரதேச வளர்ச்சி குறித்து விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக உள்ளேன். அவர் பங்கேற்க தயாரா என்று நான் கேட்கிறேன்.

கசாப் விவகாரம்

எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி என்ன செய்துள்ளார்?. பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா தீவிரவாதி ‘கசாப்’-ன் பெயருக்கு புது விளக்கம் அளித்துள்ளார்.

க என்றால் காங்கிரசும், சா என்றால் சமாஜ்வாதியும், ப் என்பதற்கு பகுஜன் சமாஜையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தை பொருத்தவரையில் க என்றால் ‘கபுதார்’ (புறா) என்றுதான் சிறுவர் முதல் பெரியவர் வரை தெரிந்து வைத்துள்ளோம்.

இந்தமுறை பாஜக பிடித்து வைத்துள்ள கபுதாரை (புறாவை) மக்கள் விடுதலை செய்வார்கள். உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக தோற்று விட்டது.

மீண்டும் ஆட்சி

இதனால்தான் அக்கட்சி தலைவர்கள் பேசும் விதம் முற்றிலும் மாறி விட்டது. மாநிலத்தில் பல்வேறு மதத்தவர் மத்தியில் நல்லிணக்கத்தையும், அண்ணன் தம்பி உறவையும் சமாஜ்வாதி கட்சி பேணி வருகிறது.

மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தி வரும் சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.

எனவே மீண்டும் அக்கட்சிகளுக்கு வாக்காளர்கள் மறுபடியும் வாய்ப்பு அளிக்கக் கூடாது.

மோடிக்கு கேள்வி

உத்தரப்பிரதேச வாக்காளர்களை பிரதமர் மோடி குழப்ப வேண்டாம். மாநிலத்தின் தத்துப் பிள்ளை நீங்கள் என்றால், நாங்கள் இந்த மாநிலத்தின் பிள்ளைகள். பிறந்தது முதல் இங்குதான் உள்ளோம்.

பல்வேறு உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தான் சென்ற நாடுகளில் இருந்து ஏதையாவது இந்தியாவுக்கு அவர் கொண்டு வந்துள்ளாரா?. இதுபற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள காவல் துறையைப் போல உத்தரப்பிரதேச காவல் துறையை மேம்படுத்தி வருகிறோம். இப்போது மக்களிடம் எந்தவொரு போலீசாரும் தவறாக நடந்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.