ஏ.கே.ராஜனின் நீட் தேர்வு அறிக்கை..! நன்றி தெரிவிக்கும் வட மாநிலத்தவர்கள்..!
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வுக்கு முன்பும், பின்பும் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை முழு விவரமும் ஏ.கே.ராஜன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு தாக்கல் செய்த அறிக்கையை, மக்கள் நல்வாழ்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தொடங்கலாம். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக, தனிச்சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறலாம். நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் சதவீதம் 56.02 சதவீதத்தில் இருந்து 69.53 சதவீதமாக உயர்ந்ததுள்ளது.
ஆனால், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44 சதவிகிதத்தில் இருந்து 1.7 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது. இன்னும் சில ஆண்டுகள் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையின் தரம் கேள்விக்குறியதாகிவிடும். நீட் தேர்வு ரத்து செய்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்'’என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட்டை எதிர்க்கும் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் ஏ.கே.ராஜன் அறிக்கையை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு நீட் தடை செய்யவேண்டிய ஒன்று எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.